சிஎஸ்கே பிரச்சினை:
சிஎஸ்கேவில் பெரும் பிரச்சினையாக இருப்பது ஓபனர் ருதுராஜின் பார்ம், பௌலர்கள் சொதப்பல் ஆகிய இரண்டு விஷயங்கள்தான். ருதுராஜ் சிறப்பாக செயல்படாவிட்டாலும், மற்றொரு ஓபனர் உத்தப்பா தொடர்ந்து மிரட்டலாக விளையாடி வருகிறார். அதேபோல், பந்துவீச்சில் முகேஷ் சௌத்ரி முன்பைவிட சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தீபக் சஹார் வந்துவிட்டால் பந்துவீச்சில் பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக தீர்ந்துவிடும். தீபக் சஹார், டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா என பந்துவீச்சுத் துறை வலிமை பெற்றுவிடும். இதனால், தீபக் சஹாரின் வருகைக்குத்தான் சிஎஸ்கேவினர் காத்துக்கிடக்கின்றனர். அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் குணமாகி, பயிற்சியை தொடங்கிவிட்டார் என கடந்த வாரம் தகவல் வெளியாகியிருந்ததால், ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் அணியில் இணைந்துவிடுவார் என்றுதான் கருதப்பட்டது.
மீண்டும் காயம்:
இந்நிலையில் பயிற்சி மேற்கொண்டு வந்த அவருக்கு, திடீரென்று முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயத்தின் தன்மை குறித்து இன்னமும் எதுவும் கூறப்படவில்லை. இந்நிலையில் அவர் ஐபிஎலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபக் சஹார் பவர் பிளேவில் விக்கெட்களை வீழ்த்தி, துவக்கத்திலேயே நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியவர். இவருக்கு மாற்றாக இதே உத்வேகத்துடன் இருக்கும் பௌலரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. இந்நிலையில், தீபக் சஹாருக்கு பதிலாக இந்திய அணியின் சீனியர் பௌலர் இஷாந்த் ஷர்மாவை மாற்று வீரராக தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.