பார்த்திவ் படேல் பேட்டி:
இந்நிலையில் சிஎஸ்கே அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிஎஸ்கேவுக்காக விளையாடிய பார்த்தீவ் படேல் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், “மகேந்திரசிங் தோனி தற்போது 7ஆவது இடத்தில் களமிறங்குவதால் 10, 15 பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையில் தொடக்க ஆட்டக்காரராகவேதான் தோனி இருந்தார். அதேபோல், இப்போதும் அவர் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடலாம்” எனக் கூறினார்.
தோனிக்கு கோரிக்கை:
மேலும் பேசிய அவர், “ஓபனராக இல்லையென்றால், 3-4ஆவது இடத்தில்கூட அவர் களமிறங்கலாம். அவர் 14,15ஆவது ஓவர்கள்வரை களத்திற்குள் இருந்தால், அணியின் ஸ்கோர் நிச்சயம் அதிகரிக்கும். ஆட்டத்தின் போக்கை அசால்ட்டாக மாற்றக் கூடியவர். கடினமான நேரங்களில் அவர், இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்து மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார். தற்போது தோனி பார்மில் இருப்பதால், ஓபனராக அல்லது முதல் வரிசையில் களமிறங்கி விளையாடினால், சிஎஸ்கேவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்” எனக் கூறினார்.
ஓபனராக தோனி:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனி ஓபனராக களமிறங்கியது கிடையாது. உள்ளூர் டி20 போட்டிகளிலும் ஓனராக களமிறங்கியதில்லை. 17 ஆண்டுகளுக்கு முன்பு, 2005-ல்தான் ஒருநாள் கிரிக்கெட்டில்தான் இலங்கைக்கு எதிராக ஓபனராக களமிறங்கி முதல் போட்டியில் 7 பந்துகளில் 2 ரன்களும், அடுத்த போட்டியில் 96 பந்துகளில் 106 ரன்களும் அடித்திருந்தார்.
சிஎஸ்கே அணிக்காக அதிகபட்சமாக 3ஆவது இடத்தில் களமிறங்கி, 7 இன்னிங்ஸ்களில் 188 ரன்களை சேர்த்திருந்தார். அதில் ஒரு அரை சதமும் அடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டி நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.